Sunday, July 3, 2011

கல்லைப் பிசைந்து .....


நான் கற்கும் காலத்தில் சில காலம் கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் கற்க நேர்ந்தது.
அப்போதெல்லாம் என்னுடன் கற்ற வெளியூர் மாணவர்கள் நீ எந்த ஊர் எனக் கேட்டால் நான் வாழைச்சேனை என பதில் சொன்னால் உங்களூரில் அதிகம் வாழை மரங்கள் இருக்குமா? என அடுத்த கேள்வியும் கேட்பார்கள். அதேபோன்று ஓட்டமாவடி என்றாலும் மாமரங்கள் இருக்குமா? என்றும் கேட்பார்கள் இந்த முப்பத்தி எட்டு வயதுவரை நான் எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்வி கல்குடா என்றால் அப்படிப் பெரிதாக கல் எங்கே இருக்கிறது?
கல்குடா எமதூரிலிருந்து ஒருசில மைல் தூரங்கள்தான் ஆனாலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

புலிகளின் கொட்டம் அடங்கி எமதூரைச் சுற்றி அடைக்கப் பட்டிருந்த காவலரண்கள் தளர்ந்து நாங்களும் தமிழர் பிரதேசத்துக்குள் சென்று திரும்பி வரலாம் என்ற நிலை தோன்றியபோது நான் முதன்முதலில் சென்ற இடம் கல்குடா,பாசிக்குடா கடற் கரைகளுக்குத்தான்.

அதற்கு முக்கிய காரணம் சுமார் 13 வருடங்களாக கொழும்பில் கடை உணவுகளையே சாப்பிட்டு மரத்துப் போன நாக்குக்கு  fresh மீன் வாங்கி சமைத்து உண்ணவேண்டும்  என்ற ஆசைதான்.
எனது துறைமுக நண்பர்களில் ஒருவன் சொல்வான் கொழும்பில் சமைக்கின்ற மீன்கள் கடலில்  வாழ்ந்த காலங்களை விடவும் ''பிரிட்ஜில்'' வாழ்ந்த காலங்கள்தான் அதிகமென்று.

கடற்கரையில் கரை வலை இழுப்பவர்கள் இத்தன மணிக்கு வந்தால் மீன் தரலாம் தம்பி என்றார்கள். நானும் அந்த நேரம் வரை கமராவும் கையுமாக அந்தக் கடற்கரையெல்லாம் அலைந்தேன் அந்த சில நிமிடங்களில்தான் கல்குடா என்ற பெயர் பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது.

மாதுறு ஓயா ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் எழிலில் அங்கங்கே தெரியும் கற்களும், கற்களில் நான் கண்ட உருவங்கள் இதோ


























 





























இவைகளெல்லாம் எதேச்சையாய் வடிவம் பெற்றது  என்று நம்பலாமா?
அல்லது நீரோட்டத்தில் கரைக்கப் பட்டு இந்த வடிவம் பெற்றிருக்கலாம் என்றால் அனைத்துக் கற்களுமல்லவா அழகு பெற்றிருக்க வேண்டும் ஏன் இந்தக் கற்கள் கரைந்து நேர்த்தி பெறவில்லை?


 
















சுமார் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்குமுன் மீரவோடையின் நான்காம் வட்டாரத்தின் ஒரு பகுதி சட்டிபானக் குடா என்றும், சட்டிபானத் தெரு என்றும் அழைக்கப் பட்டது.
அந்த நாட்களில் அங்கிருந்த வீடுகள்தோறும் களிமண்ணும் ஆற்றுமண்ணும் குவியலாக இருக்கும்.
களிமண்ணை எடுத்து நீர்தெளித்து பொலித்தீன் அல்லது சாக்கினால் மூடிவைப்பார்கள் அது பொதும்பி பதப் பட்டதும் அளவாக ஆற்றுமண்ணைத் தூவி காலால் மிதித்து பதப் படுத்திக்கொண்டு குண்டு குண்டாக உருட்டி தட்டையான ஓடுகளில் வைத்து ஒருகை தட்டினைச் சுழற்ற மறுகை களிமண்ணில் நடனமிடும்
சில நிமிடங்களிலேயே அந்த களிமண் உருண்டைகள் சட்டிகளாகவும்,பானைகளாகவும்,கு
டங்களாகவும். உலமூடிகளாகவும் உருவம் பெறும். பின்னர் அதை வெயிலில் வைத்து உலர்த்தி அடுக்கி வைப்பார்கள்.
மழை வராத ஒருநாளில் அங்கே  தயாரிக்கப் பட்ட பலரது பாத்திரங்கள் ஒரே சூளையில் சுடப்படும்.
என்ன அதிசயம் அதுவரை களிமண் நிறத்தில் கருப்பாக இருந்த பாத்திரங்கள் சூளை பிரிக்கும் போது சுட்ட இறால்கள் போல சிவப்பாகத் தக தகக்கும்.

இப்போது இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?
களிமண்ணைக் குழைத்து பாத்திரங்கள் செய்வதுபோல் கல்லைக் குழைத்து உருவங்கள் வடித்த ஒரு சந்ததி முன்பொருகாலத்தில்  வாழ்ந்த்திருக்கலாமோ? என்று எனக்குள் எண்ணத் தோன்றியது. 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 
எஸ்.நளீம்           

Thursday, June 9, 2011

பொலிஸ் நாயும் ஐ .பி.குதிரையும்


       பஞ்சு பொம்மைகள்போல் மெது மெதுவென்று உருண்டோடித் திரியும் நாய்க் குட்டிகளைக் கண்டால் என் மனதும் அதன் பின்னால் உருண்டோடும். அது என் பால்ய பருவம்.

ஆனால் எனக்கும் பாட சாலைக்குமான தொடர்பை இது குறைத்துவிடும் என்று என் பெற்றோர் நம்பினர்.என் தந்தை ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் அமீராக இருந்ததாலும் அமீர் வீட்ட்டில் நாய்  வளர்க்கிறார்கள் என்று யாரும் சொல்லிவிடுவார்கள் என்ற பயமும் இருந்ததால் நாய் வளர்ப்பதற்கான தடை எங்கள் வீட்டில் பலமாக இருந்தது.

என்றாலும் இத்தனை இராணுவக் கெடுபிடிக்குள் எப்படியோ கொழும்பு நகருக்குள் குண்டுகள் வந்து சேர்ந்ததுபோல் .நானும் அன்றில் வீட்டுக்குத்தெரியாமல் வித விதமான நாய்க் குட்டிகளைக் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டுதான் இருந்தேன்.இதற்க்கு எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த மரவள்ளித் தோட்டம் எனக்கு வசதி தந்தது. யாருக்கும் தெரியாமல் கட்டி வைத்திருக்கும் நாய்க்குட்டி இரவிலே மழை பெய்து நனைந்து குளிரிலே கத்தும் போது எத்தனையோ தடவைகள் அந்த நாய்க் குட்டிகளுக்காய் நானும் படுக்கையிலே அழுதிருக்கிறேன். 

எனவே இந்த இரகசியத்தைத் தொடர்வதில் எனக்குப் பெரும் சவாலாக இருந்தது இரண்டு விடையங்கள்தான் .ஒன்று நான் உண்ணும் உணவில் மீதம் பிடித்து நாய்க்காக வேறு படுத்துவது ;இரண்டாவது மோப்ப நாய்கள்போல் என் பின்னாலேயே தொடரும் என் சகோதரிகள்.
பாடசாலை விட்டு வீட்டுக்கு  வந்து புத்தகங்களை வைத்துவிட்டு சீருடையை களைவதற்கு முன்பே என் செல்ல நாய்க் குட்டிகளைத் தேடி ஓடுவேன் ,அங்கே  ஏமாற்றம்தான் இருக்கும். இதனால் இன்றுவரை நாய் வளர்க்கும் என் ஆசை நிறைவேறாமலே போயிட்டு 

சரி அது அப்போ இபோதைக்கு வருவோம் 
கொழும்பு துறை முகத்துக்குள் அண்மைக்காலமாக அல்சேஷன்  முதல் கொண்டு பலவகையான மோப்ப நாய்கள் பாதுகாப்பு கடமைக்காக பயன் படுத்தப் படுகின்றன. இதில் பொலிஸ் நாய்களும் துறைமுகத்துக்குச் சொந்தமான நாய்களும் அடங்கும்.

கொழும்புத் துறைமுகத்தின் பிரதான வாயில் பாதுகாப்புக் கடமைகளுக்காக துறை முகப் பொலிசாருக்குச் சொந்தமான இரண்டு நாய்கள் தொடர்ச்சியாக கடமை செய்கின்றன 
சிறுவர் காட்டுன்னான ''ஜங்கிள் புக்கில்'' வரும் பகீரா போன்று   தோற்றம் கொண்ட கருப்பு நிறத்தில் ஒன்றும் அதன் ''நெகடிவ் ''போன்ற வெள்ளை நிறத்தில் ஒன்றும் இருக்கின்றன. இந்த வெள்ளை நிற நாயை பராமரிப்பது போலீஸ் ''கோன்ஸ்டப்ள்''  நண்பன் உபாலி. அவனிடமிருந்து அந்த நாய்கள் பற்றிய சில உண்மைகளை கேட்டு அறிந்து கொண்டேன். அவுஸ்த்ரேலியாவில் இருந்து வரவழைக்கப் பட்டதாக கூறினான்.

''அவுஸ்த்ரேலியாவின் மனிதர்கள்,குதிரைகள்  போல் நாய்களும் பெரிதாகத்தான் இருக்கின்றன'' என்றேன் சிரித்துக் கொண்டான். அவை எட்டு வயது பூர்த்தியானவை என்றும் இலங்கைக்கு வந்து  ஏழு வருடங்கள் ஆகிவிட்டதாகவும் அவனது பராமரிப்பில் ஆறு வருடங்களாக இருப்பதாகவும் அவை அவற்றுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்டு வரும் உணவுகளை மாத்திரமே உட்கொள்வதாகவும் அவற்றுடன் ஆங்கிலத்தில் மாத்திரமே உரையாட முடியும் என்றும் கூறினான்

அவை கடமைக்கு வந்தவுடன் மிக உற்சாகமாக குதித்தோடி  அந்த வாயில் சூழலை மிக உன்னிப்பாக மோப்பம் பிடித்துவிட்டு மிகச்சாதுவாக வந்து படுத்துக் கொள்கின்றன.
சென்றவாரம் நாயுடன் கடமையில் இருந்த நண்பன் உபாலியிடம் இந்த நாய்கள் குண்டுகளைக் கண்டு பிடிப்பதாக கூறுகிறீர்கள் ஆனால் இங்கே கடமையில் இருக்கும் ''நேவி'' இடம் எத்தனை வகையான குண்டுகள் இருக்கின்றன.....?
என எனது சந்தேகத்தை தெரிவித்தேன். சிரித்துக் கொண்டே உபாலி அருகில் நின்ற நேவி ஒருவரின் துப்பாக்கி ரவை ஒன்றை பெற்று என்னிடம் தந்து நான் அந்தப் பக்கமாக நாயை அழைத்துச் செல்கிறேன் எங்காவது மறைத்து வையுங்கள் பார்க்கலாம் என்றான்.

நானும் சற்று ஒதுங்கலான இடத்தைப் பார்த்து அதைப் புதைத்துவிட்டேன். பின்னர் நாயை அழைத்து வந்த உபாலி ஆங்கிலத்திலே உத்தரவினைப் பிறப்பித்தான்
என்ன ஆச்சர்யம் மிகச்சரியாக மோப்பம் பிடித்து வந்த அது துப்பாக்கிரவை புதைக்கப் பட்ட இடத்தில் பிட்டத்தை வைத்து உட்கார்ந்து கொண்டது. பின்னர் அவ்விடத்தை விட்டும் அகல மறுத்தது. குரைத்துக் குரைத்துக் காண்பித்தது. அதனிடம் அன்பாக நடந்துகொண்ட உபாலி அதன் உச்சியையும் பிடரிப் பகுதியினையும் மசாஜ் செய்வதுபோல் தடவி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டே ''அவைகளுக்கு கட்டளை பிறப்பித்தால் மாத்திரமே குண்டுகளைக் கண்டு பிடிக்கின்றன'' என்றான்.

தொடர்ந்து பேச்ச்சுத் தொடர்ந்த நான் ''உங்கள் நாய்களுக்கும் பதவி உயர்வு இருப்பதாகவும் அவைகளைப் பராமரிக்கின்றவர்கள் சாதாரண பி.சி.யாக இருக்கின்ற போது நாய்கள் எஸ்.ஐ. யாக ஐ.பி. யாக பதவி உயர்வு பெற்று விடுவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன் என்ற போது அதனை மறுத்த அவன் மிருகங்களுக்கு என்ன பதவி உயர்வு கொடுப்பது..? சும்மா சுவாரஸ்யத்துக்காக சொல்கிறார்கள் அதில் உண்மை ஒன்றும் இல்லை ''என்றான்.

தொடர்ந்து பேசிய அவன் அந்த நாய்களைக்  கையாள்வதில் தனக்கு சவாலாக இருப்பது நம் நாட்டுக் கட்டாக்காலி நாய்கள்தான் அவைகளிடமிருந்து இவைகளைப் பாதுகாப்பதில் வேண்டாம் என்றாகி விடுகிறது என்றான்.

    கடந்த காலங்களில் கொழும்புத்துறைமுகத்தில் ஈ, டி, யாக கடமை வகித்த முஸ்லிமான ஒருவர்; நாய், பூனைகளை அண்டவிடாது கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்ததால்  சிலகாலம் நாய்களைக் காண முடிய வில்லை.
    பின்னர் அமைச்சர் மாறியபோது அவரும் சென்றுவிட்டதால் நாய்ப் பெருக்கம் வாயில்கள் தோறும் ஆறேழு குட்டிகளுடன் நாய்கள் குடிகொண்டு விட்டன.

    அண்மையில் நான் கண்ட ஒரு காட்ட்சி அல்லது சம்பவம் நாய்கள் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயத்தையே புரட்டிப் போட்டுவிட்டது .

    மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன் அந்த ''ரோஷி ''அழுகிய நிலையில் ஒரு எலியினை சுவைத்துக் கொண்டிருந்தது. அருவருப்பு மாளாமல் சீ.. கடி...என்றேன் அகன்றோடிய அது  மீண்டும் வளைத்துக் கொண்டு வருகையில் காக்கை ஒன்று மலம் கழித்ததும் அதையும் நாக்கினால் சுவைத்தது. இவை எதனையும் காணாத ''நேவி'' நண்பன் ஒருவன் பிஸ்கட்டுகளை உடைத்து கையில் வைத்துக் கொண்டு ''ரோஷி '' என்றான் தனது வாலைச் சுழற்றிய வண்ணம் விரைந்தோடிய ''ரோஷி'' பின் இரட்டைக் காலில் எழுந்து நின்று  அவனது கையில் இருந்த பிஸ்கட்டுகளை லபக்கென்று வாயில் எடுத்துக் கொண்டது அவனதுகையையும் நனைத்து.

    எதுவித அசூசையும் இல்லாது கையை கலிசனில் துடைத்துக் கொண்ட அவன் பிஸ்கட்டுகளை உடைத்து உண்ணத் தொடங்கினான்.

    நான் அன்றெல்லாம் எச்சில் உமிழ்ந்த வண்ணமிருந்தேன் .

    நன்றி; 
    எங்கள் தேசம்    
    01.14.2008